சஹாவிற்கு மீண்டும் கரோனா; இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவாரா?
இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா. இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் பயோ பபுளில் இருந்த இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் தொற்று உறுதியான நிலையில் சஹா, மருத்துவ ஆலோசனையின் படி தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் இரண்டு வார தனிமை படுத்தலுக்கு பிறகு, அவருக்கு மீண்டும் இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் முடிவில் ஒன்றில் தொற்று இல்லை என்று, மற்றொன்றில் தொற்று உள்ளது என்று வந்துள்ளது.
இதனால் அவர் மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,“எனது தனிமைப்படுத்தல் காலம் இன்னும் நிறைவடையவில்லை. எனக்கு தற்போது எடுக்கப்பட்ட இரண்டு பரிசோதனையின் முடிவில், ஒன்றில் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் நான் தற்போது முன்பை விட நலமாக உள்ளேன். மேலும் எனது நிலை குறித்த தவறான செய்தியை, தகவலையோ யாரும் பரப்ப வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சஹால் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.