முல்தான் மைதானத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியை போல அதிரடியை வெளிப்படுத்திய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த முயற்சித்தனர். ஆனால் இம்முறை பாகிஸ்தான் பவுலர்கள் சுதாரித்துக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர்.

Advertisement

இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் பென் டக்கட் 63 ரன்களும், ஆலி போப் 60 ரன்களும் அடித்து அவுட்டாகினர். முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது டெஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது, 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Advertisement

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக தொடங்கியது. முதல் நாள் முடிவில் 107 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் பாபர் அசாம் மற்றும் சவுத் சக்கீல் இருவரும் இருந்தனர். இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் அரை சதம் கடந்து 75 ரன்கள் அடித்திருந்த போது ஆட்டம் இழந்தார். நன்றாக விளையாடி வந்த சவுத் சக்கீல் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 10 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பாகிஸ்தான் அணி தடுமாறியது. அஷ்ரப் 22 ரன்களுக்கும், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கும் அவுட் ஆகினர். ஒரு கட்டத்தில் 142 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. பின்னர் இங்கிலாந்து பவுலர்களின் தாக்குதலால் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து மொத்தமாக 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 79 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கின்றது. ஜாக் லீச் 4 விக்கெட்டுகள், மார்க் அவுட் 2 விக்கெட்டுகள், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் நாள் முடிவில் வலுவான இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாளில் இப்படி 202 ரன்களுக்குள் சுருண்டதால் தற்போது பெருத்த பின்னடைவை சந்தித்து இருக்கிறது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியும் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 4, ஜோ ரூட் 21 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

Advertisement

ஆனால் மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்த நின்ற பென் டக்கட் அரைசதம் கடந்தார். அதன்பின் பென் டக்கெட் 79 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி புரூக் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி இதுவரை 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News