BAN vs SA, 1st Test: அணியை சரிவிலிருந்து மீட்ட மெஹிதி ஹசன்; முன்னிலை பெற்ற வன்கதேசம்!

Updated: Wed, Oct 23 2024 19:47 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானாது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாகவே தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிததனர். இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியும் தொடக்கத்திலேயே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கைல் வெர்ரைன் மற்றும் வியான் முல்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கைல் வெர்ரைன் சதமடித்து அசத்தியதுடன் 114 ரன்களையும், மறுபக்கம் அரைசதம் கடந்த வியான் முல்டர் 54 ரன்களையும் சேர்த்தனர்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல அவுட்டானது. வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 202 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஷாத்மான் இஸ்லாம் ஒரு ரன்னிலும், மொமினுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மஹ்முதுல் ஹசன் 38 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் 31 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மஹ்முதுல் ஹசன் ஜாய் 40 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து முஷ்ஃபிக்கூர் ரஹீம் 33 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வய்ப்பினைத் தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய லிட்டன் தாஸும் 7 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, வங்கதேச அணி 112 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் ஜகர் அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன, 7ஆவது விக்கெட்டிற்கு 130 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதன்மூலம் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலையும் பெற்றது. பின் 7 பவுண்டரிகளுடன் 58 ரன்களை எடுத்திருந்த ஜகார் அலி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நயீம் ஹசனும் நிதானமாக விளையாடி வருகிறார். அதன்பின் மோசமான வெளிச்சம் காரணமாக இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

அந்தவகையில் வங்கதேச அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மெஹிதி ஹசன் மிராஸ் 87 ரன்களுடனும், நயீம் ஹசன் 16 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், கேஷவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 81 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை