3rd Test, Day 3: சதத்தை நெருங்கும் கேஎல் ராகுல்; முன்னிலை பெறுமா இந்திய அணி?

Updated: Sat, Jul 12 2025 18:03 IST
Image Source: Google

Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 74 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், அதன்பின் களமிறங்கிய கருண் நாயர் 40 ரன்னிலும், கேப்டன் ஷுப்மன் கில் 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதயடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரிஷப் பந்தும் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்திருந்த ரிஷப் பந்த் ரன் அவுட்டானார். இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேஎல் ராகுல் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

Also Read: LIVE Cricket Score

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை