4th Test Day 2: ஜெய்ஸ்வால் அரைசதம்; மீண்டும் போட்டிக்குள் வந்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய அந்த அணி முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து அசத்த, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோ ரூ 122 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மெல்ல மெல்ல உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 38 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுப்பக்கம் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது அரைசதத்தை பதிவுசெய்தார்
.ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ராஜத் பட்டிதார் 17 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய ரவீந்திர ஜடேஜா 12 ரன்களுக்கும் என சோயப் பஷீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜெய்ஸ்வால் 54 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.