4th Test Day 3: அஸ்வின், குல்தீப் சுழலில் 145 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!

Updated: Sun, Feb 25 2024 16:52 IST
4th Test Day 3: அஸ்வின், குல்தீப் சுழலில் 145 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து; எளிய இலக்கை விரட்டும (Image Source: Google)

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய அந்த அணியில் ஜோ ரூட் சதமடித்து அசத்த, முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது.  இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோ ரூ 122 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 73 ரன்கள் சேர்த்த நிலையில் சோயப் பஷீர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி கொடுத்தர். 

பின்னர் களமிறங்கிய துரூவ் ஜுரெல் குல்தீப் யாதவ் இணை தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை துருவ் ஜுரெல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் தொடர்ந்தனர்.  இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 28 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஆகாஷ் தீப்பும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தனார்.

இருப்பினும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துருவ் ஜுரெல் பவுண்டரியும் சிக்சருமாக விளாச தனது முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் 6 பவுண்டரி, 4 ரன்கள் என 90 ரன்களை எடுத்த நிலையில் டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 10 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் இந்திய அணி 307 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பென் டக்கெட் 15 ரன்களிலும், ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த் ஸாக் கிரௌலி - ஜானி பேர்ஸ்டோவ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஸாக் கிரௌலி விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜானி பேர்ஸ்டோவ் 30, டாம் ஹார்ட்லி 7, ஒல்லி ராபின்சன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் 17 ரன்களில் பென் ஃபோக்ஸும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன்கள் ஏதுமின்றியும் என அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதன்மூலம் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் இன்னும் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை