இப்போட்டியில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இல்லை - கேஎல் ராகுல்!

Updated: Sat, Apr 13 2024 12:44 IST
இப்போட்டியில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இல்லை - கேஎல் ராகுல்! (Image Source: Google)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இந்த அணியில் டி காக் 19 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

ஆனால் அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய குர்னால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஆயூஷ் பதோனி அர்ஷத் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களையும், அர்ஷத் கான் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியின் டேவிட் வார்னர் 8 ரன்களுக்கும், பிரித்வி ஷா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் இணைந்த அறிமுக வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் - ரிஷப் பந்த் இணை அதிர்டையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஜேக் ஃபிரெசர் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இதையடுத்து தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “இப்போட்டியில் நாங்கள் மேலும் 10-15 ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். நாங்கள் இப்போட்டியை சிறப்பாக தொடங்கவில்லை. ஒருவேளை இந்த ஆட்டத்தில் நாங்காள் குறைந்தபட்சம் 180 ரன்களை எடுத்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும். இங்கு முதலில் வேக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது. பின்னர் சில பந்து பவுன்சே ஆகவில்லை.

இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டு குல்திப் யாதவ் சிறப்பாக பந்து வீசி எங்களுக்கு ரன் சேர்க்கும் வாய்ப்பை அவர் தரவில்லை. இருப்பினும் கடைசிவரை நாங்கள் போராடினோம். இதேபோன்று ஜேக் ஃபிரெசர் இன்றைய ஆட்டத்தில் பிரமாதமாக விளையாடிவிட்டார். அவரைப் பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. புது வீரர் எப்படி விளையாட போகிறார் என்று தெரியாததால் கொஞ்சம் தடுமாறினோம். இருப்பினும் அவருடைய பேட்டிங் குறித்து நாங்கள் பல காணொளிகளை பார்த்தோம்.

எனினும் சிறப்பாக விளையாடிய அவருக்கு எங்களுடைய பாராட்டுக்கள். அதேபோல் ரிஷப் பந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து நாங்காள் ஞாயிறன்று மாலை நடைபெறும் போட்டியில் விளையாட வேண்டி உள்ளது. அதனால் நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதனை திருத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை