ராகுலின் இடத்தில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Tue, Jan 30 2024 13:36 IST
ராகுலின் இடத்தில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர். முன்னதாக விராட் கோலியும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகினார். இதன் காரணமாக அறிமுக வீரர்கள் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், சௌரவ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ராஜத் பட்டிதார் அல்லது சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான், காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலின் இடத்தில் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் இருவரும் உங்களுடன் அணியில் உள்ளனர். மேலும் விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள்.

அதனால் பட்டிதார் அல்லது சர்ஃப்ராஸ் கான் இருவரில் ஒருவருக்கு காட்டாயம் வாய்ப்பு கொடுக்க வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. என்னைப்பொறுத்த வரையில் நான் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புவேன். ஏனெனில் அவர் வழக்கத்திற்கு மாறான முறையில் பேட்டிங் செய்யக்கூடியவர். அதுமட்டுமின்றி சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படக்கூடியவர்” என்று தெரிவித்துள்ளார். 

அதேசமயம் கேஎல் ராகுல் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “தொடர்ந்து காயங்களை சந்தித்து வருவது கேஎல் ராகுலின் கெரியரில் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஏனெனில் அவர் பலமுறை இதுபோன்ற காயங்களைச் சந்தித்து தொடரின் பாதியிலேயே வெளியேறி வந்துள்ளார். முன்னதாக கூட ஐபிஎல் தொடரின் போது காயமடைந்து நீண்ட நாள்களுக்கு பின் கம்பேக் கொடுத்திருந்தார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

அதேபோல், இத்தொடரின் முதல் இன்னிங்ஸில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் அவரால் அணியை வெற்றிக்கு கொண்டு செல்லும் உறுதி இருந்தது. ஏனெனில் இந்திய அணியில் சிறப்பான் ஸ்வீப் ஷாட்களை அடிக்கும் வீரர்கள் ரோஹித் மற்றும் கேஎல் ராகுல் மட்டுமே இந்த அணியில் இருந்தனர். இதில் தற்போது கேஎல் ராகுலும் இரண்டாவது போட்டியில் இருக்கமாட்டார் என்பது அணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை