ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்கி மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. 

Advertisement

இதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள 70 போட்டிகள் லீக் சுற்றுக்கான முழு அட்டவணை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது.

Advertisement

கொல்கத்தா அணிக்காக விளையாட இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர அதிரடி வீரர் அலெஸ் ஹேல்ஸ் 1.5 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருக்க விரும்பாத காரணத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அலெஸ் ஹேல்ஸ் நேற்று திடீரென அறிவித்தார்.

கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் அதன்பின் ஐபிஎல் உள்ளிட்ட பல முக்கிய தொடர்களில் பங்கேற்கவில்லை. அப்படிப்பட்ட வேளையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிடுவது வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார்.

அவரின் முடிவை ஏற்றுக் கொண்டுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் ஆரோன் ஃபிஞ்சை ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த பல வருடங்களாக ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனாக இருந்து வரும் இவர் கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்று அந்நாட்டுக்கு முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வாங்கிக்கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர்.

ஏற்கனவே நடந்த ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்காத நிலையில் தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம் வாங்கியுள்ளது பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 

Advertisement

இதுபற்றி கொல்கத்தாவின் தலைமை இயக்குனர் வெங்கி மைசர் பேசுகையில். “ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை விட தனது உடல் நலத்திற்காகவும் குடும்பத்திற்காகவும் முன்னிரிமை காட்டும் அலெஸ் ஹேல்ஸ் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கு பதிலாக டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ஆரோன் பின்ச் எங்கள் அணியில் விளையாடுவதை வரவேற்கிறோம். அவர் விரைவில் எங்கள் அணியுடன் இணைய உள்ளார்” என கூறினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆரோன் ஃபிஞ்ச் ஐபிஎல் வரலாற்றில் ஆதிக அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். ஆம் இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், புனே வாரியர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 8 அணிகளுக்காக ஏற்கனவே விளையாடியிருந்த அவர் தற்போது 9ஆவது அணியாக கொல்கத்தா அணியில் விளையாட உள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News