தோனி இன்னும் 3 ஐபிஎல் சீசன்களை கூட விளையாடுவார் - ஏபிடி விலலியர்ஸ்!

Updated: Thu, Nov 30 2023 12:40 IST
தோனி இன்னும் 3 ஐபிஎல் சீசன்களை கூட விளையாடுவார் - ஏபிடி விலலியர்ஸ்! (Image Source: Google)

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணியானது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அதற்கு முன்னதாக வீரர்களின் ஏலமானது டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்குள் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 26ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது. அந்த வகையில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு இருந்தது. 

இதில் சென்னை அணியில் இருந்து மொத்தமாக எட்டு வீரர்கள் வெளியேற்றிய நிலையில் எதிர்வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சில வீரர்களை எடுக்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணி வெளியிட்ட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் எம்.எஸ் தோனி தான் கேப்டனாக தொடர்கிறார் என்றும்  உறுதி செய்திருந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் போது கடைசி கட்டத்தில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்ட தோனி மைதானத்தில் சிரமப்பட்டதையும் நம்மால் பார்க்க முடிந்தது.

 

அதுமட்டுமல்லாமல் நடப்பு சீசனிலேயே சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது ரசிகர்களுக்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தோனியின் கடைசி சீசனை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் தோனி மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளது குறித்து தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தோனியின் கம்பேக் குறித்து டி வில்லியர்ஸ் தனது யூட்யூப் சேனலில் பேசுகையில், “தோனியின் பெயர் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பார்த்த போது, மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த சீசனில் தோனி விளையாடிய போதே, அதுதான் அவரின் கடைசி சீசன் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அவர் மீண்டும் ஐபிஎல் சீசனில் விளையாட தயாராகிவிட்டார். தோனி எப்போதும் ஆச்சரியமான வீரர் தான். யாருக்கு தெரியும், தோனி இன்னும் 3 சீசன்களை கூட விளையாடுவார் என்று தோன்றுகிறது. அவர் பெயரை பார்த்த போது உற்சாகமடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சீசனில் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை என்றாலும், சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் களமிறங்குவார் என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை