எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்!

Updated: Thu, Dec 07 2023 21:46 IST
எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்! (Image Source: Google)

தென் ஆபிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். கடந்த 2004ஆம் ஆண்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் சாதாரண வீரராக விளையாடினார். இருப்பினும் நாளடைவில் தம்முடைய அனுபவத்தால் முன்னேறிய அவர் எதிரணி வீரர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை உருண்டு புரண்டு மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்டு கற்பனை செய்ய முடியாத புதுப்புது ஷாட்டுகளை அறிமுகப்படுத்தினார்.

அந்த வகையில் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவரை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம், சதம் மற்றும் 150 ரன்களை அடித்த வீரர் என்ற 3 உலக சாதனைகளை ஒரே போட்டியில் படைத்தது அவருடைய தரத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

அப்படி நவீன கிரிக்கெட்டில் ஹீரோவாக உருவெடுத்த அவர் 2019 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு 6 மாதங்கள் முன்பாக திடீரென்று 35 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். அதன் பின் சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் தோனி இப்போதும் விளையாடும் நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாகவே ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் 35 வயதுக்கு பின் தம்முடைய வலது கண் பார்வை மிகவும் மங்கலாக தெரிய தொடங்கியதாலயே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். அதற்காக அறுவை சிகிச்சை செய்த போது எப்படி நீங்கள் சமீப காலங்களாக விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் வீட்டில் உள்ள சிறுவன் தற்செயலாக குதிகாலால் என் கண்ணில் உதைத்தான். அதிலிருந்து நான் என்னுடைய வலது கண்ணின் பார்வையை இழக்க ஆரம்பித்தேன். அதற்காக எனக்கு அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர் என்னிடம் எப்படி உங்களால் கிரிக்கெட்டி விளையாட முடிகிறது? என்று வியப்பாக கேட்டார். 

அதிர்ஷ்டவசமாக என்னுடைய கேரியரின் கடைசி 2 வருடங்களில் விளையாடுவதற்கு என்னுடைய இடது கண் உதவி செய்தது. எனக்கு மிகப்பெரிய வலியை கொடுத்த 2015 உலகக்கோப்பை தோல்வியிலிருந்து வெளி வருவதற்கு நீண்ட காலங்கள் தேவைப்பட்டது. அதிலிருந்து வந்த பின் என்னால் பழைய ஆர்வத்துடன் விளையாட முடியவில்லை. 

இருப்பினும் 2018இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் கடைசியாக விளையாடுவோம் என்று நினைத்து விளையாடினேன். பொதுவாக என் மீது யாரும் கவனம் செலுத்துவதை நான் விரும்புவதில்லை. அதனால் கிரிக்கெட்டில் மகத்தான பெருமை கொண்ட நான் இறுதியில் நன்றி விடைபெறுகிறேன் என்ற வகையில் சென்றேன்" என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை