சஞ்சு சாம்சன் விஷயத்தில் இந்திய அணியின் முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன - அபிஷேக் நாயர்!

Updated: Sat, Aug 19 2023 20:11 IST
சஞ்சு சாம்சன் விஷயத்தில் இந்திய அணியின் முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன - அபிஷேக் நாயர்! (Image Source: Google)

அயர்லாந்துக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்துவிட்டது. ஆனால் எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய மெக்கார்தி மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 51 ரன்கள் சேர்க்க, அந்த அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 139 ரன் சேர்த்தது. இதற்கு அடுத்து இந்திய அணி விளையாடும் பொழுது மழை ஆபத்து அதிகம் இருந்தது. 

ஐந்து ஓவரின் முடிவில் 27 ரன்கள் இந்திய அணி எடுத்திருக்க வேண்டும் என்கின்ற நிலையில், இந்திய அணி அதைவிட அதிகமான ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து பவர் பிளே ஆறாவது ஓவர் முடியும் பொழுது 32 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 45 ரன்கள் எடுத்திருந்தது. இந்த விதிக்கு விக்கெட் விழ விழ ரன் அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆறு ஓவர் வரை விக்கெட் விழாத காரணத்தால் இந்திய அணி பலமான முன்னிலை பெற்று இருந்தது. 

ஆனால் ஏழாவது ஓவரில் அடுத்தடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா இருவரும் ஆட்டம் இழக்க, மழையும் வர இந்திய அணி இரண்டு ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் திலக் வர்மா அவரது வழக்கமான நான்காவது இடத்திற்கு பதிலாக மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றப்பட்டு களம் இறக்கப்பட்டார். ஆனால் அவர் உள்ளே வந்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றத்துடன் திரும்பினார். இதனால் அப்பொழுது ஆட்டத்தில் பரபரப்பும் ஏற்பட்டது. அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அடுத்த இரு பந்துகளில் விக்கெட்டை இழக்காத காரணத்தினாலே இந்திய அணி வெற்றி பெற்றது.

இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “இந்திய அணி நிர்வாகத்தால் எடுக்கப்படும் பல முடிவுகளால் நான் ஆச்சரியப்பட்டு போகிறேன். திலக் வருமா வழக்கமாக நான்காவது இடத்தில் விளையாடுவதை நீங்கள் பார்த்து வருகிறீர்கள். மேலும் ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் வழக்கமாக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்பவர். அவர் இடது கையா வலது கையா என்பது இங்கு முக்கியமே கிடையாது.

உங்களது அணியில் ஐந்து இடதுகை வீரர்கள் இருக்கிறார்கள். எதிரணியில் ஒரே ஒரு இடதுகை சுழற் பந்துவீச்சாளர் இருக்கிறார். மேலும் அவர்களது கேப்டன் வலது கையில் ஒரு இரண்டு ஓவர்கள் சுழற் பந்துவீச்சு வீசலாம். பந்து திரும்பாத காரணத்தால் இந்த ஆடுகளத்தில் அது எல்லாம் முக்கியமான விஷயமே கிடையாது. திலக் வர்மா நம்பர் நான்கில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங் ஆர்டரை பற்றி யோசிக்காதீர்கள். அவர் தொடர்ந்து அதே இடத்தில் விளையாட விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை