இது முற்றிலும் ஆச்சரியமான ஒன்று - கேதர் ஜாதவ்!

Updated: Thu, May 04 2023 20:28 IST
Image Source: Google

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக இந்திய சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்திருக்கிறது.

2010 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கேதார் ஜாதவ் 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 7.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு விளையாடினார். இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் கேதார் ஜாதவ் தனது பெயரை ஒரு கோடி ரூபாய்க்கு பதிவு செய்திருந்தார். ஆனால் அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வில்லிக்குப் பதிலாக தன்னை எப்படி ஒப்பந்தம் செய்தது என்பது குறித்து கேதார் ஜாதவ் பேசியிருக்கிறார்.

இது குறித்து பேசிய கேதார் ஜாதவ், “நான் அப்பொழுது ஜியோ சினிமாவில் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்தேன். சஞ்சய் பாய் என்னை அழைத்தார். அவர் என்னிடம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். நான் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். அவர் என்னிடம் நீங்கள் பயிற்சி செய்கிறீர்களா? என்று கேட்டார். நான் வாரத்தில் இரண்டு முறை பயிற்சி செய்வதாகச் சொன்னேன். மேலும் அவர் எனது பிட்னஸ் பற்றி கேட்டபொழுது நான் எனது ஹோட்டலில் ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறேன். அதனால் நன்றாக இருப்பதாக கூறினேன்.

இதற்கு அவர் எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் நான் பிறகு உங்களை அழைக்கிறேன் என்று கூறினார். அந்த நிமிடம்தான் நான் உணர்ந்தேன் அவர் என்னை ஆர் சி பி அணிக்காக விளையாடுவதற்காக கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று. இது முற்றிலும் ஆச்சரியமான ஒன்று ஆனால் மகிழ்ச்சிகரமான ஆச்சரியம். இது மிகவும் அற்புதமான வாய்ப்பு. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அணி ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது 110 சதவீதத்தை தருவேன்” என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::