ஹனுமா விஹாரி வீரர்களை மிரட்டியதாக புகர்; ஆந்திரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை!

Updated: Wed, Feb 28 2024 15:28 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், ஆந்திர கிரிக்கெட் சங்கம் மற்றும் ஹனுமா விஹாரியின் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் ஆந்திரா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹனுமா விஹாரி திடீரென அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அதன்பின் அந்த அணி மத்திய பிரதேச அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின், அந்த அணியின் ஹனுமா விஹாரி தான் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும், இதனால் இனி ஆந்திரா அணிக்காக விளையடப்போவதில்லை என்றும் அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மகனுக்காக தன்னுடைய கேப்டன்சி பறிக்கப்பட்டதாகவும் குண்டைத் தூக்கிப்போட்டார். 

அதன்பின் சம்மந்தப்பட்ட அரசியல்வாதியின் மகன் பிரித்வி ராஜ், “நீங்கள் தேடும் வீரர் நான் தான். ஹனுமா விஹாரி கூறிய குற்றச்சாட்டுகள் பொய். இதுபோன்ற அனுதாப விளையாட்டுக்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விளையாடுங்கள்” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார். இந்நிலையில்தான் தான் அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என சக வீரர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஹனுமா விஹாரி வெளியிட்டார். 

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆந்திரா கிரிக்கெட் சங்கம், “சில வீரர்கள் வந்து செல்வதால் உள்ளூர் வீரர்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர் என வீரர்களின் பெற்றோர்கள் எங்கள் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்துள்ளனர். ஆனால் விஹாரியின் அனுபவத்தை மனதில் வைத்து நாங்கள் அவரைத் தக்க வைத்துக் கொண்டோம். இருப்பினும், விஹாரி சமூக வலைதளங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது துரதிர்ஷ்டவசமானது.

கேப்டனாக தொடர அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஆதரவு தெரிவித்த போதிலும், தான் பதிவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஹனுமா விஹாரி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட வீரர்கள் விஹாரி மீது ஆந்திர கிரிக்கெட் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் ஹனுமா விஹாரி தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக புகாரளித்துள்ளார்கள். இந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி பிசிசிஐக்கு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை