ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் - நஜிபுல்லா ஸத்ரான்!

Updated: Sat, Dec 09 2023 12:37 IST
ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் - நஜிபுல்லா ஸத்ரான்! (Image Source: Google)

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 17ஆவது சீசனானது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் கோலாலமாக நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் வெளியிட்டு விட்டது.

அதோடு இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக டிரேடிங் செய்யப்பட்டு அணிமாற்றம் அடைந்த வீரர்கள் குறித்த பட்டியலும் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலமும் நடைபெற இருக்கிறது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க இதுவரை 1,116 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

அதில் இந்தியாவிலிருந்து 830 வீரர்களும், வெளிநாட்டில் இருந்து 336 வீரர்களும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால் பத்து அணிகளாலும் 77 இடங்களில் மட்டுமே நிரப்ப முடியும் என்பதனால் கடுமையான போட்டி இந்த இடத்திற்கு நிலவும் என்று தெரிகிறது. இதில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அந்த அணியை சேர்ந்த 21 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரரான நஜிபுல்லா ஸத்ரான் ஆர்சிபி அணிக்காக தான் ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்படுவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒவ்வொரு வீரரை போன்றே எனக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதை என்னுடைய கனவு என்றே சொல்லலாம். ஏனெனில் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது நல்ல அனுபவம் கிடைக்கும்.

உலகளவில் உள்ள பல்வேறு முன்னணி வீரர்களுடன் இணைந்து ஓய்வறையை பகிரும் போது அது ஒரு நல்ல சூழலை நமக்கு கற்றுத்தரும். அந்த வகையில் நான் ஆர்.சி.பி அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் இதுவரை ஐபிஎல் தொடரில் விராட் கோலி சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. எனவே இம்முறை அவருடன் பயணித்து கோப்பையை வெல்ல விரும்புகிறேன்” என்று வெளிப்படையாக அவர் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை