தனித்தனி அணிகளாக உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது- அனில் கும்ப்ளே!

Updated: Tue, Nov 15 2022 11:31 IST
Anil Kumble calls for separate Indian teams in Test and white-ball cricket (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் அசத்தலாக செயல்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் அயர்லாந்திடம் தோற்றதை தவிர்த்து பெரும்பாலும் வென்று வெற்றி நடை போட்ட அந்த அணி அழுத்தமான நாக் அவுட் போட்டியில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியாவை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டில், 1992 உலககோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானை தெறிக்க விட்டு கோப்பையை வென்றது.

முன்னதாக 2019இல் 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற அந்த அணி தற்போது வரலாற்றிலேயே முதல் முறையாக ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பையையும் ஒரே நேரத்தில் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்சமயத்தில் இங்கிலாந்துக்கு நிகரான அணி இல்லை என்றே கூறலாம். இதற்கு காரணம் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் அதிரடி எனும் ஒரே அணுகுமுறையை பின்பற்றும் இங்கிலாந்து அதற்காக வீரர்களை தனித்தனியே தேர்வு செய்கிறது.

குறிப்பாக சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய இங்கிலாந்து இப்போது பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது அதிரடியால் மிரட்டும் அணியாக மாறியுள்ளது. மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஏற்கனவே இங்கிலாந்து மிரட்டும் நிலையில் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ நிர்வகிக்கும் இந்தியா மட்டும் இன்னும் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டன் ஒரே மாதிரியான வீரர்கள் என்ற பழைய பஞ்சாங்கத்தை பின்பற்றுகிறது. 

எனவே இந்த ஒரே குட்டையை குழப்பம் ஆதிகாலத்து அணுகு முறையை தூக்கி எறிந்து விட்டு இங்கிலாந்து போல தனித்தனியான அணிகளை உருவாக்கி அதிரடியாக செயல்பட வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நிச்சயமாக தற்போது உங்களுக்கு தனித்தனி அணிகள் தேவைப்படுகிறது. குறிப்பாக டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேவைப்படுகிறார்கள். என்னைப் பொருத்த வரை கடந்த டி20 உலக கோப்பை உட்பட சமீப காலங்களில் அவர்கள் நிறைய ஆல் ரவுண்டர்களை உருவாக்குவதில் ஆர்வத்தைக் காட்டுகிறார்கள் என்பதே தற்போதைய இங்கிலாந்து அணி நமக்கு காட்டுகிறது. அவர்களுடைய பேட்டிங் ஆர்டரை பாருங்கள். அவர்களிடம் 7வது இடத்தில் அதிரடியான லியாம் லிவிங்ஸ்டன் விளையாடுகிறார்.

“ஆஸ்திரேலியாவிடம் 6வது ஸ்டோனிஸ் விளையாடுகிறார். நீங்களும் அது போன்ற அணியை உருவாக்க முயற்சி செய்யுங்கள். கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த மாதிரியான வீரர்களை தேர்வு செய்து வருங்கால அணியை உருவாக்குகிறார்கள் என்பதே முக்கியமாகும்” என்று தெரிவித்துள்ளார். 

அதாவது வெள்ளைப் பந்து மற்றும் சிகப்பு பந்து ஆகிய 2 வகையான கிரிக்கெட்டுக்கும் தனித்தனியான அணிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அணில் கும்ப்ளே, அதில் அதிகப்படியான ஆல் ரவுண்டர்களை உருவாக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் கூறுவது போல இந்திய அணியில் பேட்ஸ்மேன்களில் ஹர்திக் பாண்டியா மட்டுமே பந்து வீசுபவராக உள்ளார். ஆனால் இங்கிலாந்து அணியில் மொய்ன் அலி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய 2 முக்கிய வீரர்கள் ஆல் ரவுண்டர்களாக அசத்துகிறார்கள். எனவே வரும் காலங்களில் நிறைய ஆல் ரவுண்டர்களை உருவாக்குவதே இந்திய அணியால் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் வெற்றி காண முடியும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை