பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய அணியில் இடம்பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறவுள்ளது. இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளன. அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை களமிறக்க அணி நிர்வாகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக செப்டம்பர் மாதம் தொடங்கும் துலீப் கோப்பை அர்ஷ்தீப் சிங் விளையாடுமாறும் அவரை இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள அர்ஷ்தீப் சிங் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாவது உறுதியாகியுள்ளது. ஏனெனில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 17 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதுகுறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், "இந்திய அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதனால் அவர் செப்டம்பர் 5ஆம் தொடங்கும் துலீப் கோப்பையில் விளையாடுமாறும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியவில் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து அவரும் துருப்புச்சீட்டாக விளங்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.