சூர்யகுமார் யாதவ் கொடுத்த நம்பிக்கை எனக்கு உதவியது - அர்ஷ்தீப் சிங்!

Updated: Mon, Dec 04 2023 11:43 IST
சூர்யகுமார் யாதவ் கொடுத்த நம்பிக்கை எனக்கு உதவியது - அர்ஷ்தீப் சிங்! (Image Source: Google)

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியினை பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் இறுதிவரை வெற்றி இலக்கை நோக்கி மிகச் சிறப்பாக முன்னேறி வந்தது. 

குறிப்பாக வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் களத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் இருந்ததால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முக்கியமான இறுதி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 6 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மேத்யூ வேட் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். 

இதன் காரணமாக இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. குறிப்பாக முதல் மூன்று ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்து 37 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் கடைசி ஓவரை அவர் எவ்வாறு வீசப் போகிறார்? என்று அனைவரும் அச்சமடைந்த வேளையில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இந்தியாவை அட்டகாசமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய அர்ஷ்தீப் சிங், “நான் இந்த போட்டியில் முதல் மூன்று ஓவர்களிலேயே நிறைய ரன்களை விட்டுக் கொடுத்ததாக நினைக்கிறேன். அதோடு ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் அதற்கு நான் செய்த தவறுதான் காரணமாக இருக்கும் என்றும் வருந்தினேன். மேலும் கடைசி ஓவரை வீச எனக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அந்த வகையில் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது.

அந்த முக்கியமான 20ஆவது ஓவரை சூரியகுமார் யாதவ் என்னிடம், நடந்ததெல்லாம் நடந்துவிட்டது.. நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.. நம்பிக்கையுடன் பந்து வீசு என்று என் கையில் பந்தை கொடுத்தார். இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக அடித்ததாகவே கருதுகிறேன். இந்த மைதானத்தில் இந்த ரன்களை வைத்து நிச்சயம் அவர்களை சுருட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை