ஆஷஸ் 2023: மீண்டும் பாஸ்பாலில் அசத்திய இங்கிலாந்து; பந்துவீச்சில் தடுமாறிய ஆஸி!

Updated: Sat, Jul 29 2023 23:38 IST
ஆஷஸ் 2023: மீண்டும் பாஸ்பாலில் அசத்திய இங்கிலாந்து; பந்துவீச்சில் தடுமாறிய ஆஸி! (Image Source: Google)

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மிக முக்கியமான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தா அணி மிக அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்று இருந்தது. ஆனால் போட்டியின் நான்காவது ஐந்தாவது நாளில் பெய்த மழை, ஆஸ்திரேலியா அணியை மீண்டும் ஆஷஸ் தொடரை தக்க வைக்க உதவி செய்தது.

இந்நிலையில் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.  இதில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 91 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களையும், உஸ்மான் கவாஜா 47 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 36 ரன்களையும், டாட் மர்ஃபி 34 ரன்களையும் சேர்க்க ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் 12 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி இன்னிங்ஸின் முதல் பந்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். 

இதில் ஸாக் கிரௌலி அரைசதம் கடந்தார். அதேசமயம் பென் டக்கெட் 42 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, 71 ரன்களை எடுத்திருந்த ஸாக் கிரௌலியும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய் ஜோ ரூட் ஒருபக்கம் பொறுப்பாக விளையாட, மறுமுனையில் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ரூட்டுடன் இணைந்த ஜானி பேர்ஸ்டோவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென் உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 91 ரன்களுக்கும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறினர். 

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது. இதில் ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், டாட் மர்ஃபி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 377 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை