ஆஷஸ் 2023:இங்கி, அஸி., அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!

Updated: Wed, Jun 21 2023 14:16 IST
Ashes 2023: Australia, England Penalised For Slow Over-Rates In First Test (Image Source: Google)

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 273 ரன் எடுக்க, ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா (34), போலந்து (13) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக உணவு இடைவேளை வரையிலான ஆட்டம் பாதிக்கப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கிய போது, 67 ஓவரில் 174 ரன் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி.

பிராட் ‘வேகத்தில்’ போலந்து (20) ஆட்டமிழந்தார். பின், கவாஜா, ஹெட் இணைந்தனர். துவக்கத்தில் ஹெட் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம், கவாஜா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலியின் 45வது ஓவரில் ஹெட் இரண்டு பவுண்டரி விளாசினார். ஆனால், அதே ஓவரில் இவர் 16 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் செயல்பட்ட கவாஜா அரை சதம் அடித்தார்.

சற்று தாக்குப் பிடித்த கிரீன் (28), ராபின்சனிடம் சிக்கினார். மறுபக்கம் நீண்ட நேரம் தொல்லை தந்த கவாஜாவை (65) ஸ்டோக்ஸ் போல்டாக்கினார். கடைசி 20 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 63 ரன் தேவைப்பட்டன. கேப்டன் கம்மின்ஸ், கேரி போராடினர். இந்நிலையில் கேரி (20), ரூட் வலையில் சிக்க, ‘டென்சன்’ எகிறியது.

கம்மின்ஸ், லியான் இணைந்தனர். ரூட் ஓவரில் கம்மின்ஸ் 2 சிக்சர் உட்பட 14 ரன் எடுக்க, வெற்றியை வேகமாக நெருங்கியது ஆஸ்திரேலியா. லையன் 2 ரன்னில் பிராட் பந்தில் கொடுத்த கேட்ச்சை ஸ்டோக்ஸ் நழுவவிட, இங்கிலாந்து வெற்றியும் கை நழுவியது. கடைசியில் ராபின்சன் பந்தில் கம்மின்ஸ் ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்து ‘திரில்’ வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இரு அணிகளுக்கும் போட்டி கட்டணத்திலிருந்து தலா 40 சதவீதம் அபராதம் விதிப்பததாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேசமயம் இரு அணிகளுக்கும் தலா இரண்டு கரும்புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் அவர்களுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும். அதேபோல் இரு அணி கேப்டனும் தவறுகளை ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை