ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!

Updated: Wed, Mar 22 2023 16:47 IST
Ashwin's blockbuster reaction to Pandya's genuine comment on Test return (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும். அதேநேரம் பேட்டிங் செய்வதற்கும் நன்றாக இருக்கும் என்பதால், அணியில் வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் அதிக அளவில் இருந்தால் சாதகமாக இருக்கும் என்ற புள்ளி விவரங்களும் உண்டு.

ஆஸ்திரேலியா அணியில் நிறைய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணியில் சர்துல் தாக்கூர் தவிர, மற்றவர்கள் சுழல்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியாவை விளையாட வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்ற கருத்துக்கள் எழுந்தது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடினார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவரிடம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நீங்கள் இருப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதில் பதிலளித்த அவர், “நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவேண்டும் என்று 10 சதவீதம்கூட உழைக்கவில்லை. குறிப்பாக ஒரு சதவீதம் கூட உழைக்கவில்லை. இப்படி இருக்கையில், நான் டெஸ்ட் அணியில் இடம்பெற்றால் நியாயமற்றது. நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நான் இல்லை.” என்று பேசினார். ஹர்திக் பாண்டியா இப்படி பேசியதை பாராட்டி தனது யூடியூப் சேனல் வீடியோவில் கருத்து தெரிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். 

இதுகுறித்து பேசிய அஸ்வின், “நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டோம். இங்கிலாந்தில் நடப்பதால் ஹர்திக் பாண்டியா இருந்தால் சரியாக இருக்கும் என பலரும் கூறியது சிறந்த கருத்து. இங்கிலாந்து மைதானங்களில் அவர் நன்றாக செயல்பட்டிருக்கிறார். ஆனால் இதற்கு ஹர்திக் பாண்டியா, ‘நான் அணியில் இடம் பெற்றால் அது நியாயமாக இருக்காது. ஏனெனில் நான் அதற்காக உழைக்கவில்லை.’ என்று பேசியது மிகச்சரியான அறிவிப்பு. கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் இது சரியான வார்த்தை. அதற்காக விளையாடாத ஒருவர், எப்படி அந்த அணியில் இருக்க முடியும். நியாயமாக பேசி இருக்கிறார்.” என்று பாராட்டினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை