காமன்வெல்த் 2022: ஹர்மன்ப்ரீத் அதிரடி வீண்; இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது ஆஸி!

Updated: Mon, Aug 08 2022 00:47 IST
Australia beat India, wins the GOLD MEDAL in CWG 2022 (Image Source: Google)

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஹர்மன்ப்ரித் தலைமையிலான இந்திய மகளிர் அணி, மெக் லெனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் பெத் மூனி - கேப்டன் மெக் லெனிங் இணை ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், பின்னர் அதிரடி காட்ட தொடங்கியது. 

இதில் மெக் லெனிங் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தஹிலா மெக்ராத்தும் 3 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பெத் மூனி அரைசதம் அடித்ததுடன் 61 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அதன்பின் அஷ்லெக் கார்ட்னர் 15 பந்துகளில் 25 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங், ஸ்நே ராணா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 6 ரன்களிலும், ஷஃபாலி வர்மா 11 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 8ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 65 ரன்களைச் சேர்த்து விளையாடி வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் கார்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே பூஜா வஸ்திரேக்கரும் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஸ்நே ராணா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட தீப்தி சர்மாவும் 13 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். 

இறுதியில் இந்திய அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் 19.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி, காமன்வெல்த் கிரிக்கெட் தொடரில் தங்கப்பதக்கத்தை வென்றது. இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை