இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. அப்போட்டியில் தென் ஆபிரிக்காவை 400 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற அசாத்தியமான சூழ்நிலையில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 245 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

Advertisement

அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ஓமர்சாய் 97* ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 245 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு டீ காக் 41, தெம்பா பவுமா 23, மார்க்ரம் 25, க்ளாஸென் 10, மில்லர் 24 என முக்கிய பேட்ஸ்மேன்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி ஆஃப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு போராடியது.

Advertisement

ஆனாலும் இலக்கு குறைவாக இருந்ததால் வேன் டெர் டுஷன் 76, பெலுக்வயோ 39 ரன்கள் எடுத்து 47.3 ஓவரில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக அதிகபட்சமாக முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்து உலக கோப்பையிலிருந்து வெளியேறியது. இருப்பினும் 1992, 1996, 2019 சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்தை தோற்கடித்த அந்த அணி இத்தொடரில் மிகப்பெரிய எழுச்சி கண்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் 5 கோப்பைகளை வென்று மகத்தான அணியாக திகழும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேக்ஸ்வெல் அதிரடியால் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்டது அரையிறுதி வாய்ப்பை பறித்ததாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி தெரிவித்துள்ளார். ஆனாலும் இத்தொடரின் கடைசி போட்டி வரை முடிந்தளவுக்கு முழுமூச்சுடன் போராடியதை நினைத்து பெருமைப்படுவதாக கூறும் அவர் தங்களுக்கு வருங்காலம் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கேப்டனாக எங்களுடைய செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் தொடரின் கடைசி வரையிலும் நாங்கள் வெற்றிக்காக போராடினோம். இது வருங்காலத்தில் எங்களுக்கு நல்ல பாடங்களை கொடுத்துள்ளது. குறிப்பாக இத்தொடரில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் பெருமையளிக்கிறது. இத்தொடருக்கு முன்பாக நாங்கள் உட்கார்ந்து பலவீன புள்ளிகளைப் பற்றி பேசினோம். அதன் பலனாக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை பார்த்தீர்கள்.

அந்த நேர்மறையான அம்சத்தை நாங்கள் வருங்காலமாக எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் சிறந்த சுழல் பந்து வீச்சுத் துறையை கொண்டுள்ளோம் என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே இதே போல் விளையாடினால் நாங்கள் நல்ல அணியாக உருவெடுப்போம். உலகத்திற்கு இத்தொடரின் வாயிலாக நாங்கள் நல்ல அணி என்ற செய்தியை கொடுத்துள்ளோம். குறிப்பாக பெரிய அணிகளுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடி கடைசி வரை போராடினோம். இருப்பினும் எங்களுடைய கையிலிருந்த ஆஸ்திரேலியா போட்டி கைநழுவி போனது” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News