ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கார்ட்னர் 67 ரன்களையும், பெத் மூனி 52 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரேகர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷாஃபாலி வர்மா - யஸ்திகா பாட்டியா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் ஷஃபாலி வர்மா 56 ரன்கலில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து பாட்டியாவும் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ், மிதாலி ராஜ், பூஜா வஸ்ட்ரேக்கர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தர். இறுதியில் தீப்தி சர்மா - ஸ்நே ராணா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.
இதன்மூலம் 49.3 ஓவர்களிலேயே இந்திய மகளிர் அணி இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இத்தொல்வியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 26 ஒருநாள் போட்டிகளுக்கு பிறகு முதல் தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.