ஐபிஎல் 16ஆவது சீசனின் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முழுமையாக பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 172 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 173 ரன்கள் இலக்கை எட்டினால் முதல் வெற்றி பெறலாம் என்கிற நோக்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகச்சிறந்த துவக்கம் கிடைத்தது. இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர்.

Advertisement

இஷான் கிஷன்(31) தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன் பிறகு உள்ளே வந்த திலக் வர்மா-ரோகித் சர்மா உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை இலக்கை நோக்கி எடுத்துச் சென்றார். இவரும் துரதிஷ்டவசமாக 41 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கடைசி வரை நின்று போராடிய ரோகித் சர்மா 65 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டபோது, களத்தில் நின்ற டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் 19ஆவது ஓவரில் 15 ரன்கள், 20ஆவது ஓவரில் 5 ரன்கள் அடித்து முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உறுதி செய்தனர்.

Advertisement

விளையாடிய நான்கு போட்டிகளில் நான்கையும் இழந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. இதில் குறிப்பாக இரண்டு போட்டிகள் சொந்த மைதானத்தில் நடந்தவை என்பது கூடுதல் வருத்தமளிக்கக்கூடிய செய்தியாக டெல்லி அணிக்கு அமைந்திருக்கிறது.

போட்டி முடிந்த பிறகு இந்த தோல்வி குறித்து பேசிய வார்னர் கூறுகையில், “இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டம் எங்கள் கையில் இருந்தது. விளையாடிய நான்கு போட்டிகளிலும் வீரர்கள் நன்றாக போராடினார்கள். ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோல் எங்களது அணியிலும் நோர்ட்ஜே மற்றும் முஸ்தபிஸுர் மிகச் சிறப்பாக பந்துவீசி உலகத்தரம் மிக்க பவுலர்கள் என்பதை வெளிப்படுத்தினார்கள். கடைசியில் எதிரணியில் இருந்த டிம் டேவிட் ஆட்டத்தை முடித்து கொடுத்துவிட்டார். இதுதான் பெரிய மாற்றமாக அமைந்துவிட்டது.

4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருந்தாலும் இதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். இனி வரிசையாக விக்கெட்டுகளை இழக்கக்கூடாது. அக்சர் பட்டேல் இனி முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் செய்யவேண்டும். இந்த இரண்டும் அடுத்தடுத்த போட்டிகளில் நடக்கும். அது வெற்றிக்கான பாதையாக அமைந்தால் கூடுதல் மகிழ்ச்சி அடைவேன். கேப்டனாக இருந்து கொண்டு தவறுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது.” என்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News