PAK vs ENG: சேஸிங்கில் உலக சாதனைப் படைத்த பாபர் - ரிஸ்வான் ஜோடி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற இந்லையில், பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நேற்று கராச்சியில் நடந்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் மோயின் அலியின் இறுதிநேர அதிரடியால் 199 ரன்களைக் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து நிர்ணயித்த 200 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 19.3 ஓவரில் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 110 ரன்னும், முகமது ரிஸ்வான் 88 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தனர். இதன் மூலம் பாபர் ஆசாம்-முகமது ரிஸ்வான் ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.
இதற்கு முன்பு இந்த ஜோடி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேசிங்கின் போது 197 ரன் குவித்ததே ஒரு தொடக்க ஜோடியின் அதிக ரன்னாக இருந்தது.
அந்த சாதனையை அவர்களே முறியடித்தனர். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற சமனில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.