இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது - ஹர்ஷா போக்ளே!

Updated: Thu, Jul 06 2023 22:13 IST
‘Balance Of Team Not Perfect,’ Says Harsha Bhogle! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த தொடர் 12ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் திலக் வர்மா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர ஜெய்ஸ்வால், சுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவுடன், அக்‌ஷர் பட்டேல் இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்களாக ரவி பிஸ்னோய், சாஹல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், ஆவேஸ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியின் தேர்வு, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் கலவையான விமர்ச்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் தொடருக்கான இந்திய அணி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணி குறித்து பேசியுள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, டி20 தொடருக்கான இந்திய அணி பந்துவீச்சில் போதிய பலத்துடன் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஹர்ஷா போக்ளே, “இந்திய அணியின் பந்துவீச்சு போதிய பலத்துடன் இல்லை. அக்‌ஷர் பட்டேலை தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படக்கூடியவர்கள் இல்லை. அதே போன்று ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட பந்துவீசக்கூடியவர்கள் இல்லை. எனவே தான் இந்த அணி சமபலம் கொண்ட அணியாக எனக்கு தெரியவில்லை. 

அக்‌ஷர் பட்டேல் நிச்சயம் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும், ஆனால் அக்‌ஷர் பட்டேலிற்கு இடம் கிடைத்தால், குல்தீப்  யாதவ் அல்லது சாஹலுக்கு அணியில் இடம் கிடைக்காது. என்னை பொறுத்தவரையில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இருவருமே ஆடும் லெவனில் விளையாட வேண்டும். அதே போன்று அர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் அல்லது ஆவேஸ் கான் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம்பெற வேண்டும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை