வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் மஹ்மதுல்லா அரைசதம் அடித்து கைக்கொடுத்தார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக வீரராக விளையாடிய நாதன் எல்லீஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மேத்யூ வேட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் - பென் மெக்டர்மோட் இணை அதிரடியாக்க விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
இதில் மார்ஷ் அரைசதம் விளாசி அசத்தினார். பின் 35 ரன்களில் மெக்டர்மோட் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷும் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 23 ரன்கள் தேவைப்பட்டது.
வங்கதேச அணி தரப்பில் 19ஆவது ஓவரை வீசிய முஸ்தபிசூர் ரஹ்மான் ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் வங்கதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
மேலும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக வங்கதேச அணி கைப்பற்று முதல் டி20 தொடராகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.