BAN vs PAK, 2nd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!

Updated: Tue, Jul 22 2025 22:39 IST
Image Source: Google

BAN vs PAK, 2nd T20I: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதல் போட்டியில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இதையடுத்து வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு பர்வேஸ் ஹொசைன் மற்றும் முகமது நைம் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் முகமது நைம் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் 8 ரன்களுக்கும், தாவ்ஹித் ஹிரிடோய் ரன்காள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைனும் 13 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜக்கர் அலி மற்றும் மஹெதி ஹசன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மஹெதி ஹசன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் பேட்டிங் செய்த ஷமிம் ஹொசைன் ஒரு ரன்னிலும், தன்ஸிம் ஹசன் 7 ரன்னிலும், ரிஷாத் ஹொசைன் 8 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாக்கர் அலி அரைசதம் கடந்ததுடன், ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஸா, அஹ்மத் டேனியல் மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் சைம் அயுப் ஒரு ரன்னிலும், முகாமது ஹாரிஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஸமானும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து ஹசன் நவாஸ் மற்றும் முகமது நவாஸ் இருவரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, 9 ரன்களுக்கு சல்மான் ஆகாவும், 13 ரன்களில் குஷ்தில் ஷாவும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் பாகிஸ்தான் அணி 47 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அப்பாஸ் அஃப்ரிடி 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபஹீம் அஷ்ரஃப் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களி ஆட்டமிழந்தார். மேற்கொண்டு அஹ்மத் டேனியலும் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Also Read: LIVE Cricket Score

வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மஹெதி ஹசன் மற்றும் தன்ஸிம் ஹசன் ஷாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியும் அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாக்கர் அலி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை