BAN vs PAK, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான்!

Updated: Thu, Jul 24 2025 22:04 IST
Image Source: Google

BAN vs PAK, 3rd T20I: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 82 ரன்களை எட்டிய நிலையில், சைம் அயூப் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களை எடுத்திருந்த ஃபர்ஹானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஹசன் நவாஸ் 33 ரன்களையும், முகமது நவாஸ் 27 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், நசும் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தன்ஸித் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் லிட்டன் தாஸ் 8 ரன்னிலும், மெஹிதி ஹசன் மிராஸ் 10 ரன்னிலும், ஜாக்கர் அலி ஒரு ரன்னிலும், மஹெதி ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், ஷமிம் ஹொசைன் 5 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான முகமது நைமும் 10 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக வங்கதேச அணி 41 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய முகமது சைஃபுதீன் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்னில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை