இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த குசால் மெண்டிஸ் - கமிந்து மெண்டிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் குசால் மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் விளையாடி வந்த கமிந்து மெண்டிஸ் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அதேசமயம் அரைசதம் கடந்து விளையாடி வந்த குசால் மெண்டிஸ் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா - கேப்டன் சரித் அசலங்கா இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சதீரா சமரவிக்ரமா அரைசதம் கடந்து அசத்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சதீரா சமரவிக்ரமா 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 61 ரன்களுடனும், சரித் அசலங்கா 6 சிக்சர்களை விளாசி 44 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்களைச் சேர்த்து அசத்தியது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டாப் ஆர்டர் வீரர்கள் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், சௌமீயா சர்க்கார் 12 ரன்களுக்கும், தாவ்ஹித் ஹிரிடோய் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டொவும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் வங்கதேச அணி 64 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த மஹ்முதுல்லா - ஜாகிர் அலி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்டதை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

Advertisement

அதன்பின் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 54 ரன்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மெஹிதி ஹசன் 16 ரன்களுக்கும், ரிஷாத் ஹுசைன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இலங்கை தரப்பில் கடைசி ஓவரை தசுன் ஷனகா வீசினார். 

இதில் வங்கதேச அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஜாகிர் அலி 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 68 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களாலும் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இலங்கை அணி தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ், பினுரா ஃபெர்னாண்டொ, தசுன் ஷனகா ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதன்மூலம் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News