இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதன்பின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. இதன்மூலம் 68 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் கலித் அஹ்மத், அறிமுக வீரர் நஹித் ரானா ஆகியோர் தலா 3 மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் தைஜுல் இஸ்லாம் 47 ரன்கள் எடுத்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், ரஹிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தை தனஞ்செயா டி சில்வா 23 ரன்களுடனும், விஸ்வா ஃபெர்னாண்டோ 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஃபெர்னாண்டோ 4 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை மீண்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இந்த இன்னிங்ஸிலும் சதமடித்து மிரட்டினர். முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் இந்த இருவரும் சதமடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 108 ரன்களுக்கும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கமிந்து மெண்டிஸ் 16 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 164 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிரஸ் 4 விக்கெட்டுகளையும், நஹித் ரானா, தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி வங்கதேச அணிக்கு 511 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

Advertisement

பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சொதப்பினர். அதன்படி அந்த அணி மஹ்முத் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், ஸகிர் ஹசன் 19 ரன்களிலும், கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோ 6 ரன்களுக்கும், ஷஹதத் ஹொசைன், லிட்டன் தாஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் இனைந்த தைஜுல் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை மொமினுல் ஹக் 7 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 6 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

இதில் தஹுல் இஸ்லாம் 6 ரன்களோடு பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

Advertisement

பின்னர் களமிறங்கிய ஷொரிடுல் இஸ்லாம், கலெத் அஹ்மெத், நஹித் ரானா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்த மொமினுல் ஹக் 87 ரன்களைச் சேர்த்திருந்தார். இதனால் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் கசுன் ரஜிதா 5 விக்கெட்டுகளையும், விஷ்வா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதன்மூலம் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய தனஞ்செயா டி சில்வா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News