BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை 178 ரன்னில் சுருட்டிய இலங்கை; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றம்!

Updated: Mon, Apr 01 2024 19:44 IST
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை 178 ரன்னில் சுருட்டிய இலங்கை; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றம்! (Image Source: Google)

இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 93 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்களையும், திமுத் கருணரத்னே 86 ரன்களையும் சேர்த்து அசத்தினர். வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஸகிர் ஹசன் 28 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் தைஜுல் இஸ்லாம் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

அதெசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த ஸகிர் ஹசன் 54 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் மொமினுல் ஹக் 33 ரன்களைச் சேர்த்ததைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்ட இழந்தனர். இதனால் வங்கதேச அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணியில் திமுத் கருணரத்னே 4 ரன்களுக்கும், குசால் மெண்டிஸ் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிஷன் மதுஷ்கா 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய தினேஷ் சந்திமல், கேப்டன் தனஞ்செயா டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இலங்கை அணி தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹசன் மஹ்முத் 4 விக்கெட்டுகளையும், கலெத் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 455 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை