BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!

Updated: Wed, Apr 03 2024 12:51 IST
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை! (Image Source: Google)

இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 93 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்களையும், திமுத் கருணரத்னே 86 ரன்களையும் சேர்த்து அசத்தினர். வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் 54 ரன்கள் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியதால், அந்த அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை மட்டுமே சேர்த்தது.  இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏஞ்சலோ மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது விக்கெட்டை இழக்க, இலங்கை அணி 157 ரன்கள் சேர்த்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 4 விக்கெட்டுகளையும், கலெத் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இலங்கை அணி 510 ரன்கள் என்ற இலக்கை வங்கதேச அணிக்கு நிர்ணயித்தது. 

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 243 ரன்கள் பின்தங்கிய நிலையில், கடைசிநாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் 44 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 10 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் தைஜுல் இஸ்லாம் 14 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். 

மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஹசன் மஹ்முத், கலெத் ஆஹ்மத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹிதி ஹசன் 81 ரன்களைச் சேர்த்திருந்தார். இதனால் வங்கதேச அணி 318 ரன்களி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளையும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டி மற்றும் இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் தொடர்நாகன், ஆட்டநாயகன் விருதுகளை வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை