பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!

Updated: Wed, Dec 27 2023 19:28 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் தொடரின்13ஆவது வீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி நடத்தின. பிரிஸ்பேனிலுள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கேப்டன் காலின் முன்ரே ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் பிரௌன் - மெக்ஸ்வீனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் ஜோஷ் பிரௌன் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் களமிறங்கிய ரென்ஷா 17 ரன்களுக்கும், சாம் பில்லிங்ஸ் 23 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த மெக்ஸ்வீனி 73 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, பிரிஸ்பேன் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிட்னி அணி தரப்பில் டேனியல் சாம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு கேமரூன் பான்கிராஃப்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேசன் சங்காவும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பான்கிராஃப்ட்டும் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய ஒலிவியர் டேவிஸ், அலெக்ஸ் ரோஸ், டேனியல் சாம்ஸ் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது.

பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் ஸேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்ஸர் ஜான்சன், மேத்யூ குன்னெமேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நாதன் மெக்ஸ்வீனி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை