அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நேற்று வெளியானது.
முன்னதாக பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலில் 25 இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. அதன் ஒருபகுதியாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இதனால் மே 08ஆம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதல் இன்னிங்ஸில் 10.1 ஓவர்களள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் எதிரொளியாகவே இப்போட்டியானது பாதியில் கைவிடப்பட்டது என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
இதன் காரணமாகவே ஐபிஎல் தொடரில் 18ஆவது சீசனில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்தது. இதனையடுத்து ஐபிஎல் அணிகளில் இடம்பிடித்திருந்த வெளிநாட்டு வீரர்களும் அவர்களின் தாய் நாட்டிற்கு சென்றனர்.
இதனால் ஐபிஎல் தொடரானது மீண்டும் எப்போது தொடங்கும், இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? அல்லது வேறு நாட்டிற்கு மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கின. இந்நிலையில் ஐபிஎல் தொடரானது திட்டமிட்டப்படி அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் இன்றைய தினம் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை அடுத்த வாரம் முதல் தொடகும் வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போட்டிகளை தென் இந்தியாவில் மட்டும் நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும், எஞ்சிய போட்டிகளுக்கான மறு அட்டவணையை பிசிசிஐ கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: LIVE Cricket Score
இதுதவிர பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியும் மீண்டும் முதல் பந்திலிருந்தே நடைபெறும் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தற்போது வெளிநாட்டு வீரர்களை ஒரு சிலரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் தாயகம் திரும்பியுள்ள நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் இத்தொடரில் பங்கேற்பார்கள என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அவர்கள் தொடரில் பங்கேற்காத பட்சத்தில் அது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.