நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான அணுகுமுறையில் விளையாடி முதல் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த நிலைமையில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து மீண்டும் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நாளில் மிரட்டலாக பந்து வீசி இங்கிலாந்தை 258 ரன்களை வெற்றிகரமாக துரத்த விடாமல் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வரலாற்றில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. 

Advertisement

அப்படி பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முழங்கால் காயத்தை சந்தித்தார். அதனால் 2ஆவது இன்னிங்ஸில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் ஃபீல்டிங் செய்யவும் தடுமாறியது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய கலக்கத்தை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தது என்றே கூறலாம். ஏனெனில் 2023 ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதியன்று தொடங்கும் நிலையில் 16.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் விளையாடாமல் போனால் அது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை சந்தேகமில்லை.

Advertisement

சொல்லப்போனால் ஆஷஸ் தொடருக்காக ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்று ஏற்கனவே அவர் அறிவித்துள்ளது சென்னை அணிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைமையில் முழங்கால் காயத்தால் அவர் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா எந்த கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதாலும், ஆஷஸ் தொடருக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதாலும் நிச்சயமாக அதற்குள் குணமடைந்து விளையாடுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அந்த காயம் நான் விரும்பும் செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியாமல் என்னை தடுக்கிறது. இருப்பினும் அடுத்த 4 மாதங்களில் எனக்கு போதிய நேரங்களை கொடுத்து அதை சரிப்படுத்த முயற்சிக்க உள்ளேன். எனவே கவலை வேண்டாம் நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். குறிப்பாக இது பற்றி ஸ்டீபன் ஃப்ளமிங்கிடம் பேசிய போது அவர் என்னுடைய தற்போதைய உடல்நிலையை பற்றி நன்கு புரிந்து கொண்டார். எனவே அடுத்து வரும் ஒவ்வொரு வாரத்திலும் அது குணமடையும். அதற்காக உடற்பயிற்சி மற்றும் மருத்துவ குழுவினருடன் இணைந்து கடந்த 10 வருடங்களாக என்ன செய்து வருகிறேனோ அதை தொடர்ந்து செய்வதற்கு என்னை தயார் படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளேன்.

ஆஷஸ் தொடருக்கு முன்பாக எனக்கு 4 மாதங்கள் உள்ளன. அதில் பர்மிங்காம் நகரில் நடைபெறும் முதல் போட்டியில் எனது வேலையை முழுமையாக செய்ய தேவையான பயிற்சிகளை எடுக்க உள்ளேன். ஏனெனில் என்னால் சாதாரணமாக வெளிப்படுத்தும் செயல்பாடுகளை இந்த காயம் தடுக்கிறது என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இங்கிலாந்து அணியில் 4ஆவது வேகப்பந்து வீச்சாளராக என்னால் செயல்படாமல் இருப்பதை நினைக்கும் போது மிகவும் கடுப்பாகிறது. இருப்பினும் அதை மீண்டும் செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் எனக்கு நானே கொடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.

முன்னதாக காயத்தை சந்தித்தாலும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் கடைசி வரை விளையாடிய பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி விளையாட முடியாத அளவுக்கு முழங்காலில் மோசமான காயத்தை சந்திக்கவில்லை. அதனால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று எதிர்பார்க்கப்படும் அந்த காயத்திற்கு தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டு நிச்சயமாக சென்னை அணிக்காக விளையாடுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News