இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து கிட்டத்தட்ட அரையிறுதிசுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

Advertisement

இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த மிகப்பெரிய சவால் நிறைந்த போட்டியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணியும் நெதர்லாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியைத் தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்று மிரட்டலாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து போன்ற அணிகளை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா அசால்டாக 400 ரன்களை குவித்து எதிரணி பவுலர்களை பந்தாடி வருகிறது.

Advertisement

இந்நிலையில் ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். அதனால் 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவை நாக்பூரில் தோற்கடித்தது போல் இம்முறையும் தென் ஆப்பிரிக்கா வென்றால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எங்களுடைய அணி இந்த உலகக் கோப்பையில் குறைவான எதிர்பார்ப்புடன் சென்றது. குறிப்பாக ஒரு சில வீரர்கள் சிறப்பாக செயல்படும் போது அணியும் உலக கோப்பையில் சிறப்பாக செயல்படும் என்பதை நான் அறிவேன். அது தான் தற்போது நடைபெற்று வருகிறது. தற்சமயத்தில் தென்னாப்பிரிக்காவிடம் அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருக்கிறது. சொல்லப்போனால் வரலாற்றிலேயே தற்போது இருப்பது தான் தென்னாப்பிரிக்காவின் அதிரடியான மிடில் ஆர்டர் என்று நான் கூறுவேன்.

குறிப்பாக 4, 5, 6 ஆகிய இடங்களில் ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் அபாரமான பவருடன் அடித்து நொறுக்கும் திறமையும் கொண்டுள்ளார்கள். அவர்கள் சுழல் பந்து வீச்சாளர்களையும் சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருப்பது தென் ஆப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய சொத்தாகும். தற்போது அவர்கள் ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட தயாராகியுள்ளனர்.

அந்த போட்டிகளிலும் இப்போது விளையாடுவது போலவே அவர்கள் சுதந்திரமாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். தற்போது தான் தென் ஆப்பிரிக்கா ரஃக்பி உலகக்கோப்பையை வென்றுள்ளது. அந்த வகையில் இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் என்று நான் நம்புகிறேன். 2011இல் இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் விளையாடிய போட்டியில் நாங்கள் வென்றோம். இருப்பினும் அதன் பின் உலக கோப்பையை இந்தியா வென்றது. ஆனால் இம்முறையும் இந்தியாவை தோற்கடிப்பது தென் ஆபிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News