எப்போதும் என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கும், வளர்த்துக் கொள்வதற்கும் முனைப்பு காட்டுவேன் - முகமது சிராஜ்!

Updated: Thu, Apr 20 2023 21:45 IST
Image Source: Google

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர் சி பி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 174 ரன்கள் அடித்தது. மிகச்சிறப்பாக செயல்பட்ட டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி ஜோடி 137 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 59 ரன்களுக்கு அவுட் ஆனார். டு பிளசிஸ் 84 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

இந்த இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கில் சற்று நம்பிக்கையை அளித்த பிரப்சிம்ரன் 46 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 41 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு வெளியேறியதால், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சரிவை சந்தித்திருக்கிறது. ஆர்சிபி அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய சிராஜ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகள் மற்றும் முக்கியமான நேரத்தில் ஒரு ரன் அவுட் என்று அசத்திய சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்றபின் பேசிய முகமது சிராஜ், “இன்றைய போட்டியில் முதல் பந்தை வீசியவுடன் எந்த இடத்தில் பந்துவீசினால் சரியாக இருக்கும் என்று கணித்து விட்டேன். அதன் பிறகு பந்தை ஸ்விங் செய்து தொடர்ந்து தாக்குதல் நடத்தினேன். கரோனா லாக்டவுனில் நான் என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கும் உடல்தகுதியை பெறுவதற்கும் பயன்படுத்திக் கொண்டேன். 

அதற்கு முன்புவரை என்னுடைய பந்தை நிறைய பவுண்டரிகள் அடித்து வந்தார்கள். ஆகையால் என்னுடைய திட்டங்கள் என்ன? உடல் தகுதி எப்படி இருக்க வேண்டும்? என்று திட்டம் வகுத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு தினமும் பந்துவீச்சு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என அனைத்தையும் செய்தேன். அதன் பலனை இப்போது பெறமுடிகிறது. எப்போதும் என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கும், வளர்த்துக் கொள்வதற்கும் முனைப்பு காட்டுவேன். 

அணிக்கு என்னால் இந்த வகையில் மட்டுமே பங்களிப்பை கொடுக்க முடியும் என்பதால் அதில் முழு செயல்பாட்டை வெளிப்படுத்த முற்படுகிறேன். மேலும் நான் நன்றாக பீல்டிங் செய்யக் கூடியவன். துரதிஷ்டவசமாக ஆங்காங்கே அழுத்தம் காரணமாக சில தவறுகள் செய்வதால் என் மீது அப்படிப்பட்ட அபிப்பிராயம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் நான் எனது பந்துவீச்சை எப்படி சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேனோ, ஃபீல்டிங் செய்வதற்கும் அப்படிப்பட்ட கவனத்தை செலுத்தி வருகிறேன்.” என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::