பந்துவீச்சில் எந்த குறையும் தெரியவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Sat, Aug 19 2023 12:18 IST
பந்துவீச்சில் எந்த குறையும் தெரியவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா! (Image Source: Google)

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், டப்லிங்கில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில், முதல் வரிசை வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பல்பிர்னி 4, ஸ்டெர்லிங் 11, டக்கர் ரன்கள் ஏதுமின்றியும் ஆகியோர் படுமோசமாக சொதப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து, 5ஆவது இடத்தில் களமிறங்கிய கர்டிஸ் காம்பர் 39, 8ஆவது இடத்தில் களமிறங்கிய பேரி மெக்கர்தி 51ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 139/7 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 19 ஒரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் ஜெய்ஷ்வால் 24, திலக் வர்மா 0 ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். தொடர்ந்து, சாம்சன் களமிறங்கி ரன் அடித்தபோது, மழை குறிக்கிட்டது. இதனால், இந்திய அணி 6.5 ஓவர்களில் 47/2 என்ற நிலையில் இருந்தது. 

அதன்பின்னும் மழை தொடர்ந்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ஜஸ்பரீத் பும்ரா, “தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி, முழு பிட்னஸுடன் வந்திருக்கிறேன். பந்துவீச்சில் எந்த குறையும் தெரியவில்லை. எப்போதும் போலவே, பந்துவீசுவதுபோல் உணர்கிறேன். இன்று எந்த அழுத்தத்தையும் நான் உணரவில்லை. நல்லவேளை, இன்று டாஸ் எங்களுக்கு சாதகமாக இருந்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டேம்.

காலநிலை பௌலர்களுக்கு சாதகமாக இருந்தது. அதேபோல் காலநிலை இருந்தால், என்னால் தொடர்ந்து சிறப்பாக பந்துவீச முடியும். அயர்லாந்து அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். வெற்றியைப் பெற்றாலும், நம்முடைய ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை