கேப்டன் பதவி யாருடைய பிறப்புரிமையும் அல்ல - கவுதம் கம்பீர்!

Updated: Mon, Jan 17 2022 18:45 IST
Image Source: Google

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படவுள்ளார்கள்.

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார் விராட் கோலி. இதையடுத்து இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்போது துணை கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா, இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் விராட் கோலியின் முடிவு பற்றி முன்னாள் வீரர் கெளதம் கம்பீர், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

”இதில் புதிதாக ஒன்றும் இல்லை. கேப்டன் பதவி என்பது யாருடைய பிறப்புரிமையும் அல்ல. கேப்டன் பதவியை கோலிக்கு அளித்த எம்.எஸ். தோனி, அவருடைய தலைமையில் விளையாடவும் செய்தார். இத்தனைக்கும் 3 ஐசிசி கோப்பைகள், 4 ஐபிஎல் கோப்பைகளை தோனி வென்றுள்ளார். இனி ரன்கள் எடுக்க கோலி முயலவேண்டும். 

அதுதான் முக்கியம். இந்திய அணிக்காக விளையாட எண்ணும்போது கேப்டன் பதவிக்காக யாரும் கனவு காண மாட்டீர்கள். இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களிக்க கனவு காண்பீர்கள். இப்போது இது எதுவும் மாறப் போவதில்லை. டாஸ் நிகழ்வுக்குச் செல்ல மாட்டீர்கள், ஃபீல்டர்கள் எங்கு நிற்க வேண்டும் என முடிவெடுக்க மாட்டீர்கள். மற்றபடி நாட்டுக்காக விளையாடுவது பெருமைக்குரியது என்பதால் உங்களுடைய ஆர்வம் மாறப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை