நாங்கள் நல்ல கிரிக்கெட்டையும் விளையாடி வருகிறோம் - மிட்செல் சான்ட்னர்!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.
இதில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ன.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், “எங்கள் அணியைப் போலவே, தென் ஆப்பிரிக்காவும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதாக நான் நினைக்கிறேன்.
அவர்கள் சமீபத்தில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளனர், மேலும் அவர்கள் லாகூர் மைதானத்திற்கு ஏற்ப நன்கு பழகி இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன், இந்த மைதானத்தில் துபாயைப் போல் சுழற்பந்து வீச்சுக்கு சாகமாக இருக்காது. கேசவ் மகாராஜ் நீண்ட காலமாக எவ்வளவு சிறப்பாக இருக்கிறார் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம், ஷம்சியும் அங்கு இருக்கிறார், மேலும் மார்க்ராமும் பந்தை நேர்த்தியாகக் கையாள முடியும்.
Also Read: Funding To Save Test Cricket
எனவே, அவர்கள் வெளிப்படையாகவே மிகவும் சமநிலையானவர்கள் என்று நான் நினைக்கிறேன். துபாயில் இருந்த அளவுக்கு அதிக சுழற்பந்து வீச்சை நாங்கள் எதிர்கொள்ள மட்டோம் என்று நான் நினைக்கிறேன். அது எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு அது சாதகமாக அமையும். மேலும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டையும் விளையாடி வருகிறோம். எனவே, எதையும் மாற்ற வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.