ரச்சின் ரவீந்திரா ஐசிசி தொடர்களை மிகவும் விரும்புகிறார் - மிட்செல் சான்ட்னர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 77 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜகர் அலி 45 ரன்களைச் சேர்த்தார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணி தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தியதுடன் 112 ரன்களையும், டாம் லேதம் 55 ரன்களையும் சேர்த்ததன் மூலம் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், “இந்த சூழ்நிலையில் வங்கதேசம் எங்களுக்கு சவாலாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். பிரேஸ்வெல் ஒரு தரமான பந்து வீச்சாளர். இப்போட்டியில் அவர் தனது வேகத்தை மாற்றி சிறப்பாக பந்துவீசி எதிரணியை அழுத்ததில் தள்ளினார். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவது என்பது எப்போதும் அவசியமான ஒன்று.
Also Read: Funding To Save Test Cricket
விக்கெட் நான் நினைத்ததை விட இரண்டு வேகத்தில் இருந்தது. நாங்கள் பேட்டிங் செய்த போது பனியின் தாக்கும் கொஞ்சம் இருந்தது. ஆனால் நான் நினைத்த அளவுக்கு இல்லை. ரச்சின் ரவீந்திரா ஐசிசி தொடர்களை மிகவும் விரும்புகிறார். அவர் ஒருபோதும் ஆட்டத்தை விட்டு வெளியேறவில்லை. மேலும் அவர் டாம் லேதமுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களுக்கு உதவியது. ஆனால் அடுத்து போட்டியில் வேறு விக்கெட்டில் இந்தியாவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்