ரஞ்சி கோப்பை 2024: தொடர்ந்து சதங்களை விளாசி மிரட்டும் சட்டேஷ்வர் புஜாரா!

Updated: Sat, Feb 17 2024 20:25 IST
ரஞ்சி கோப்பை 2024: தொடர்ந்து சதங்களை விளாசி மிரட்டும் சட்டேஷ்வர் புஜாரா! (Image Source: Google)

இந்தியாவின் பல்வேறும் நகரங்களில் நடைபெற்று வந்த நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்து சௌராஷ்டிரா மற்றும் மணிப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. சௌராஷ்டிரா அணி தரப்பில் டிஏ ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், சேட்டன் சகாரியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணியில் கெவின் ஜிவ்ரஞ்சனி 9 ரன்களிலும், ஜேக்ஸன் 20 ரன்களிலும், ஹர்விக் தேசாய் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் அர்பித் வஸவதா - பெர்ரக் மன்கட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்களது சதங்களைப் பதிவுசெய்ததுடன், 152 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

அதன்பின் கேப்டன் வஸவதா 148 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் மான்கட்டுடன் இணைந்த சட்டேஷ்வர் புஜாராவும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடிய சட்டேஷ்வர் புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் தனது 63ஆவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார், பின் 108 ரன்களில் புஜாராவும், 173 ரன்களில் மான்கட்டும் தனது விக்கெட்டை இழந்தனர்.

இதன்மூலம் சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதன்பின் 387 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த மணீப்புர் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து 332 ரன்கள் பின் தக்கிய நிலையில் மணீப்பூர் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

இந்திய அணியின் தடுப்பூவர் என்றழைக்கப்பட்ட சட்டேஷ்வர் புஜாரா இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதம், 55 அரைசதங்களுடன் 7,195 ரன்களை குவித்துள்ளார். அதன்பின் தனது ஃபார்மை இழந்து இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட புஜாரா அதன்பின் கவுண்டி கிரிக்கெட் தொடர்களில் அபாரமாக விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். 

ஆனால் அப்போட்டியில் புஜாரா சரியாக விளையாட தவறவே அவர் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில் தான் நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசி மீண்டும் தனது கம்பேக்கிற்காக காத்திருக்கிறார். அதிலும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் விலகிய நிலையிலும் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை