மூத்த வீரர்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் - அர்ஷ்தீப் சிங்!

Updated: Wed, Nov 23 2022 15:41 IST
Constantly Trying To Learn From Experienced Players In The Team: Arshdeep Singh (Image Source: Google)

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டீவன் கான்வே 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டியும் பாதியில் முடித்து கொள்ளப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் போட்டி டிரா முடிந்தது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இப்போட்டிக்கு பின் பேசிய அர்ஷ்தீப் சிங், “அனைத்தும் அணியில் உள்ள அனுபவமிக்க வீரர்களின் வழிகாட்டுதலில் இருந்து வந்தவை. நான் அவர்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். உங்களிடமிருந்து (சிராஜ்) கடினமான பந்து வீச்சுகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். நான் புவி (புவனேஷ்வர் குமார்) பாயிடம் இருந்து நக்கிள்பால் கற்றுக்கொள்கிறேன்.

முன்னதாக நான் (முகமது) ஷமி பாயிடமிருந்து யார்க்கர்களைப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டேன். நான் என்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன், மேலும் நீங்கள் ரன்களை நிறுத்த வேண்டும் அல்லது விக்கெட்டைப் பெற வேண்டும் என்று அணிக்கு தேவைப்படும்போது நான் முன்னேறி சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை