சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; கிங்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!

Updated: Sun, Sep 29 2024 08:27 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அசாம் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாட, முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பானது 49 ரன்களை எட்டியது. அதன்பின் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அசாம் கான் இருவரும் தலா 26 ரன்களை எடுத்திருந்தந் இலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ஷாய் ஹோப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிம்ரான் ஹெட்மையர் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஷாய் ஹோப்பும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரொமாரியோர் ஷெப்பர்ட் தனது பங்கிற்கு 16 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுப்பக்கம் விளையாடிய கீமோ பால், மொயீன் அலி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களைச் சேர்த்தது. லூசியா கிங்ஸ் தரப்பில் டேவிட் வைஸ் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப், நூர் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

பின்னர் களமிறங்கிய அக்கீம் அகஸ்டே 12 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 5 ரன்களிலும், ஆரோன் ஜோன்ஸ் மற்றும் டிம் செஃபெர்ட் ஆகியோர் தலா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் வைஸ் 14 ரன்களிலும், சத்ராக் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 92 ரன்களைக் குவித்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அவருக்கு துணையாக விளையாடிய அல்ஸாரி ஜோசப்பும் 25 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் குடகேஷ் மோட்டி, மோயீன் அலி மற்றும் கேப்டன் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 35 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை