சிபிஎல் 2024, குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லூசியா கிங்ஸ்!

Updated: Thu, Oct 03 2024 09:11 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கயானா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். மேற்கொண்டு சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து சத்தினார். 

மேலும் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில், 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 79 ரன்களைக் குவித்த ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து பொறுப்பாக விளையாடி வந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களில் ஆட்டமிழக்க, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 18 ரன்களிலும், டிம் செய்ஃபெர்ட் 18 ரன்களிலும், மேத்யூ ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வைஸ் 13 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைக் குவித்தது. கயானா அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியர்ஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய கயானா அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கீமோ பால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 22 ரன்களை எடுத்த நிலையில், கீமோ பால் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 27 ரன்களிலும், டுவைன் பிரிட்டோரியஸ் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகலை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிம்ரான் ஹெட்மையர் 4 சிக்ஸர்களை விளாசி 37 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் கயானா அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை சேர்த்திருந்த தருணத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் மழை தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அமேசன் வரியர்ஸ் அணியை ஈழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி நடப்பு சிபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான்சன் சார்லஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை