ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று, மும்பை வான்கடே மைதானத்தில், நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி மிகவும் சுவாரசியமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் அதிரடியாகக் குவித்தது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் 67 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.

Advertisement

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியால் 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. அவர்கள் 170 ரன்களுக்கு சுருண்டு 229 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தார்கள். தற்பொழுது இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

Advertisement

மேலும் தொடர்ச்சியாக பெற்ற மூன்று தோல்விகளும் மோசமான தோல்விகள் என்கின்ற காரணத்தினால் ரன் ரேட் பெரிய அளவில் பாதிப்படைந்து இருக்கிறது. இதற்கு அடுத்து வரக்கூடிய போட்டிகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். மேலும் ரன் ரேட்டையும் இங்கிலாந்து உயர்த்த வேண்டும். இதன் காரணமாக இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பு ஏறத்தாழ முடிந்து விட்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய கிளாசென், “நான் விளையாடிய இன்னிங்ஸ்களில் இது ஒரு மிக முக்கியமான இன்னிங்ஸ். நான் இந்த போட்டியில் பந்தை நன்றாக அடித்ததாக உணர்கிறேன். இந்த ஆட்டம் எனக்கு எப்போதுமே நினைவில் இருக்கும். இந்த மைதானத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததால் நிறைய சோர்வு ஏற்பட்டது. அந்த அளவிற்கு மைதானம் வெப்பமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் அடுத்தடுத்து இரண்டு விக்கெடுகளை இழந்த போது இங்கிலாந்து அணி ஆட்டத்திற்குள் வந்தாலும் மார்கோ யான்சன் மிகச்சிறப்பாக விளையாடி எங்களது ரன் குவிப்பிற்கு உதவினார்.

என்னை பொறுத்தவரை அவருக்கு தான் இந்த ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்க வேண்டும். அவர் எனக்கு அளித்த ஆதரவு எனை பெரிய அளவில் ரன்களை குவிக்க வைத்தது. முதலில் நாங்கள் பெரிய ரன் குவிப்பை வழங்கியதால் எங்களுக்கு போட்டியில் கூடுதல் சாதகம் கிடைத்தது. நெதர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த பிறகு தற்போது சிறப்பாக மீண்டு வந்திருக்கிறோம். இன்றைய ஆட்டம் மொத்தத்திலேயே மிகச் சிறப்பாக அமைந்தது” என கிளாஸன் தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News