தன்னை மதமாற்றம் செய்ய ஷாஹித் அஃப்ரிடி வற்புறுத்தினார் - டேனிஷ் கனேரியா!

Updated: Thu, Oct 26 2023 21:18 IST
தன்னை மதமாற்றம் செய்ய ஷாஹித் அஃப்ரிடி வற்புறுத்தினார் - டேனிஷ் கனேரியா! (Image Source: Google)

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அணியில் பெரும்பான்மையான வீரர்கள் இஸ்லாமியர்களாகவே இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் இஸ்லாமியர் அல்லாமல் இந்து மதத்தைச் சேர்ந்த சில வீரர்கள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளனர். அதில் அனில் தல்பாத்துக்கு பின் பாகிஸ்தான் அணிக்காக  விளையாடிய மற்றொரு இந்து மதத்தைச் சேர்ந்த வீரர் டேனிஷ் கனேரியா. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 261 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வரும் டேனிஷ் கனேரியா, அண்மையில் அஹ்மதாபாத் போட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பிய போது, பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானை யார் மைதானத்தில் நமாஸ் செய்ய சொன்னது என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் பத்திரிகையாளர்களையும் காட்டமாக விமர்சித்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் விளையாடிய போது தன்னை மதமாற்றம் செய்ய தூண்டியதாக பகிரங்கமாக கூறியுள்ளார் கனேரியா. இந்த விவகாரம் குறித்து பேசிய கனேரியா, “எனது கிரிக்கெட் வாழ்க்கை உச்சத்தில் இருந்து நேரம் அது. பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியில் 4ஆவது இடத்தில் இருந்தேன். கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தேன். அந்த நேரத்தில் பாகிஸ்தான் அணியில் இம்சமான் உல் ஹக் மட்டுமே கேப்டனாகவும், சக வீரராகவும் ஆதரவு அளித்தார்.

அவருக்கு பின் சோயப் அக்தர் எனக்கு ஆதரவாக நின்றார். இவர்கள் இருவரையும் தவிர்த்து ஷாஹித் அஃப்ரிடி உள்ளிட்ட மற்ற வீரர்கள் யாரும் என்னுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட கூட மாட்டார்கள். அவர்கள் எப்போதும் என்னை இஸ்லாமிற்கு மாற வேண்டும் என்று பேசுவார்கள். அவர்களுக்கு மதம் தான் அனைத்துமாக உள்ளது. குறிப்பாக ஷாஹித் அஃப்ரிடி என்னை இஸ்லாமிய மதத்திற்கு மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர் இன்சமாம் உல் ஹக் தான்.

கவுண்டி கிரிக்கெட்டின் போது நான் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது தரகர் ஒருவரை சந்தித்ததை ஒப்புக் கொண்டேன். ஆனால் நான் எந்த தவறையும் செய்யவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ள வற்புறுத்தினார்கள். நான் இந்து மதத்தை சார்ந்தவன் என்பதால், நிர்வாகிகள் யாரும் ஆதரவளிக்கவில்லை. நான் தொடர்ந்து விளையாடினால் இஸ்லாமிய வீரர்களை படைக்கப்பட்ட சாதனைகளை நான் முறியடித்துவிடுவேன் என்று பயந்தனர்.

எனது திறமைக்கு முன் அவர்களால் நிற்க முடியாது. உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட போதே, அது நல்ல சமநிலை கொண்ட அணி இல்லை என்று எனக்கு தெரியும். அந்த அணி நட்பு மற்றும் உறவுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒன்றாகும். அதனால் உலகக்கோப்பையில் திணறுவார்கள் என்று எதிர்பார்த்தது தான்” என்று விமர்சித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை