இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா மிரட்டல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் 106, டேவிட் வார்னர் 104 ரன்கள் எடுத்த உதவியுடன் 400 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

Advertisement

அதை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் அனல் பறந்த பந்து தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று அணியாக உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்களை சாய்த்தார்.

Advertisement

மேலும் 40 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையுடன் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இப்போட்டியில் தண்ணீர் இடைவேளையின் போது டெல்லி மைதானத்தில் ராட்சத மின்விளக்குகள் அணைக்கப்பட்டு வண்ணமயமான லேசர் விளக்குகள் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் இந்த உலகக் கோப்பையில் சென்னை உட்பட அனைத்து மைதானங்களிலும் இடைவெளியின் போது இந்த நிகழ்வுகள் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக நடத்தப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தும் திட்டங்களில் ஒன்றாக இதை செய்து வரும் பிசிசிஐ அதற்கு பல கோடி ரூபாய்களையும் செலவு செய்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தண்ணீர் இடைவேளையில் இப்படி செய்வது வீரர்களுக்கு தலைவலியாக அமைவதாக மேக்ஸ்வெல் போட்டியின் முடிவில் விமர்சித்ததுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “பிக்பேஷ் போட்டியின் போது பெர்த் நகரிலும் இதே போல நடந்தது. இது எனக்கு தலைவலியை கொடுப்பது போல் உணர்ந்தேன். ஏனெனில் இது என் கண்களை சீரமைக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ள வைக்கிறது. அதனால் வீரர்களைப் பொறுத்த வரை இது முட்டாள்தனமான யோசனை என்று நினைக்கிறேன். எனவே முடிந்த வரை இதை புறக்கணிக்க முயற்சிக்கிறேன். ஏனெனில் ரசிகர்களுக்கு இது சிறப்பாக இருந்தாலும் வீரர்களுக்கு நன்றாக இல்லை” என்று கூறினார்.

 

Advertisement

ஆனால் அதற்கு ரசிகர்கள் இல்லாமல் நாம் இல்லை என்று அவருக்கு ட்விட்டரில் டேவிட் வார்னர் பதிலடி கொடுத்ததுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “அந்த ஒளிகாட்சியை நான் மிகவும் விரும்பினேன். என்ன ஒரு சிறப்பான சூழ்நிலை. இவை அனைத்தும் ரசிகர்களை பற்றியது. அவர்கள் இல்லாமல் நாங்கள் விரும்பியதை செய்ய முடியாது” என்று கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News